ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்த மக்கள்
திருக்கனுார்: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச் சேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கிலப்பட்டு ஆகிய பகுதிகளில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ள படுகையணைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கிடையே, சங்க ராபரணி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என, மாவட்ட நிர்வாகம் மற்றும் காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனையும் மீறி, தண்ணீர் நிரம்பி வழியும் கைக்கிலப்பட்டு - சுத்துக்கேணி இடையேயான படுகையணையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நேற்று அதிக அளவில் குளித்து மகிழ்ந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், பொது மக்களை ஆற்றில் இருந்து வெளியேற்றினர்.