| ADDED : ஆக 14, 2011 02:48 AM
புதுச்சேரி : 'புதுச்சேரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
வசதிஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்' என, முதல்வர்
ரங்கசாமிகூறினார்.சன்வே ஓட்டலில் நடந்த, அறுவை சிகிச்சை நிபுணர்கள்
மாநாட்டைத் துவக்கி வைத்து, முதல்வர் பேசியதாவது:புதுச்சேரியில் உள்ள 9
மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் புதுச்சேரியைச் சேர்ந்த 400 மாணவர்கள்
மருத்துவம் பயில்கின்றனர். சிறிய மாநிலமான புதுச்சேரி, கல்விக் கேந்திரமாக
மாறி வருகிறது. இங்கு சிறந்த முறையில் மருத்துவ வசதி அளிக்கப்பட்டு
வருகிறது. இதன் காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது.மருத்துவத் துறையில்
பல புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. நவீன தொழில்நுட்பங்களை
உடனுக்குடன் அறிந்து கொள்வதுடன், புதிய தொழில் நுட்பங்களைத் தெரிந்து
கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.அறுவை சிகிச்சை செய்வதற்கு, அதற்கான கூடங்கள் நல்ல வசதியானதாக இருக்க
வேண்டும். மேலும், அவற்றை முறையாகப் பராமரிக்கவும் வேண்டும்.
இல்லாவிட்டால், தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.புதுமைகளைப் புகுத்த
புதுச்சேரி அரசு எப்போதும் தயாராக உள்ளது. இறந்தவர்களின் உடலிலிருந்து
உறுப்புகளை எடுத்து, தேவைப்படும் நபர்களுக்குப் பொருத்துவதற்கான வசதிகளை
ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.