| ADDED : செப் 04, 2011 01:41 AM
புதுச்சேரி:'பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல்
செய்யப்படும்' என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.சட்டசபையில் நேற்று ஜீரோ
நேரத்தில் அன்பழகன் பேசியதாவது:பல சிரமங்களுக்கிடையே விவசாயிகள் உற்பத்தி
செய்யும் நெல்லை, அரசு கொள்முதல் செய்யாததால், அவர்கள் பெரும் துயரத்திற்கு
ஆளாகின்றனர்.நெற்களஞ்சியமான காரைக்காலில், விவசாயம் பாதியாகக் குறைந்து
விட்டது. காவிரி நீரை நம்பி, குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய
காலத்தில் உரம், விதை நெல் வழங்கவில்லை. காரைக்காலில் வேளாண்துறை, மத்திய
உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்யவில்லை.மோட்டா ரக நெல், குவிண்டால்
ரூ.1050க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசு
நிர்ணயித்துள்ளது.அதன்படி அரசு கொள்முதல் செய்யாததால், வியாபாரிகள்
சிண்டிகேட் அமைத்து, ரூ.800க்கு கொள்முதல் செய்கின்றனர்.விவசாயிகளும் வேறு
வழியின்றி, குறைந்த விலைக்கு விற்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு
கொள்முதல் செய்தால் மட்டுமே மறுபடியும் விவசாயம் செய்ய முடியும். எனவே,
இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, அரசே நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு
ரூ.14 கோடிக்குமேல் பாக்கி உள்ளது. கடன் வாங்கி கரும்பு சாகுபடி செய்த
விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கான நிலுவைத் தொகையை
உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு அன்பழகன் பேசினார்.இதற்கு பதிலளித்த முதல்வர்
ரங்கசாமி, 'பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல்
செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். கரும்பு விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா
செய்ய தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது' என்றார்.