| ADDED : ஜன 22, 2026 05:12 AM
புதுச்சேரி: தைப்பட்டத்தில் சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. இணை வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலக செய்திக் குறிப்பு: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் 2026ம் ஆண்டு தைப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், வாழை, பூக்கள், மரவள்ளி, நெகிழி மூடாக்கு மற்றும் காய்கறிகள் சாகுபடிக்குப் பிந்தைய மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தோட்டக்கலை விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை விவசாயிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உழவர் உதவியகத்தில் நேற்று (21ம் தேதி) முதல் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை வேளாண் மற்றும் விவசாய நலத்துறை இணையதளம் (https://agri.py.gov.in) வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்கள் பகுதி உழவர் உதவியகத்திலோ அல்லது புதுச்சேரி, தோட்டக்கலை அலுவலகத்திலோ வரும் பிப்ரவரி 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.