அவதுாறு பரப்பும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரி, ; தன் மீது அவதுாறு பரப்பும் அரசு அதிகாரி மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டி சட்டசபை செயலரிடம் சுயேச்சை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த மனு: முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தனி அதிகாரியாக, பொதுப்பணித்துறை பொது சுகாதாரப்பிரிவு உதவி செயற்பொறியாளர் ஞானவேல் 2 ஆண்டிற்கு முன் நியமிக்கப்பட்டார். எனது பரிந்துரையை ஏற்று நியமிக்கப்பட்ட அவர், இதுவரை, கோவில் திருப்பணி துவங்க குழு அமைக்கவில்லை. 2 மாதங்களுக்கு முன் முதல்வர் தலைமையில், எனது முன்னிலையில் ஆடி திருவிழா நடத்துவதாக பத்திரிகை வழங்கினார். ஆனால், இவருக்கும் பொதுமக்களும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விழாவை நடத்தவில்லை.இது தொடர்பாக அவரை, நான் அழைத்து விளக்கம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை. கோவில், உற்சவத்தைக்கூட ஒற்றுமையாக நடத்த முடியவில்லை. எப்படி நீங்கள் கோவில் திருப்பணியை முடிப்பீர்கள் என கேட்டேன். அதை மனதில் வைத்து கொண்டு, நேற்று முன்தினம் நடந்த ஊர் கூட்டத்தில், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், என்னை பற்றி தவறாக பேசியுள்ளார். மேலும், சாதி மோதலை உண்டாக்கும் வகையில், அரசியல் செய்து வருகிறார்.அவர் மீது துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக, தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, சைபர் கிரைம் போலீசில் தனியாக புகார் அளித்துள்ளார்.