ரூ.2714 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான ரூ. 2,714 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். சென்னை கவர்னர் மாளிகையில் தங்கிய அவர், நேற்று காலை சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு காலை 11:30 மணிக்கு வந்தார். பிரதமரை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர்ராமலிங்கம், பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடி பொது மக்களுக்கு கை அசைத்து வணக்கம் தெரிவித்தார். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார். பின், பிரதமர், புதுச்சேரியின் உள்கட்டமைப்பு, நகர்ப்புற சேவைகள், தொழில்துறை மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும் விதமாக ரூ.1,572 கோடி மதிப்பில் 74 திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,142 கோடி மதிப்பில் 19 திட்டங்கள் என, மொத்தம் ரூ. 2,714 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்துஉரையாற்றினார். பின், மத்திய கலாசார அமைச்சகம், புதுச்சேரி அரசு சார்பில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் அரவிந்தர் 150வது பிறந்த நாள் ஆண்டையொட்டி,நடந்த2வது உலக ஆன்மிக மகோற்சவத்தையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விழாவில், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், சாய் சரவணன் குமார், ரிச்சர்ட், ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன்,தீபாய்ந்தன், ராஜசேகர், செல்வம், சந்திரபிரியங்கா, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். விழா முடிந்த பின் பிரதமர் மோடி, கார் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு 12.40 மணிக்கு சென்றார். அங்கிருந்து தனிஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கல்
புதுச்சேரிக்கு நலத்திட்டங்களை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடிக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் வண்ண ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி பிரதமருக்கு பட்டாடை அணிவித்து, வெள்ளியில் முருகன் சிலை, வெள்ளி வேல் மற்றும் ஓவியத்தை பரிசாக வழங்கினார்.