அரசு நிறுவன பெயர் பலகை உடைப்பை கண்டித்து மறியல்
புதுச்சேரி: அரசு நிறுவன கடைகளில் பெயர் பலகைகளை அடித்து உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊழியர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரே அரசின் சார்பு நிறுவனமான அமுதசுரபி மருந்தகம் திறக்கப்படவுள்ளது. அதன் பெயர் பலகை ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆங்கிலத்தில் இருந்த பெயர் பலகையை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.இதனை கண்டித்து, அமுதசுரபி ஊழியர்கள் நேற்று ஜிப்மர் மருத்துவமனை எதிரே புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கடையின் பெயர் பலகையை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து ஊழியர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் வழக்குப் பதிவு ஜிப்மர் மருத்துவமனை எதிரே அரசு நிறுவனமான அமுதசுரபி மருத்தகம் பெயர் பலகையை நேற்று முன்தினம் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தியது குறித்து அமுதசுரபிநிர்வாக இயக்குநர் அய்யப்பன், 50; நேற்று டி.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், புதுச்சேரியை சேர்ந்த பாவணன், மங்கையர்செல்வன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.