புதுச்சேரி: சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கான இ-பஸ் வழித்தடங்களை பி.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் அண்மையில் இ-பஸ் சேவை துவக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள், மாணவர்கள், பொதுமக்களுக்கான இ-பஸ்கள் செல்லும் வழித்தடங்களை பி.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ளது. இது குறித்து பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் சிவக்குமார் செய்திக்குறிப்பு: சுற்றுலா பயணிகளை பொருத்தவரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 6-இ.பி., 6-இ.ஏ, 10-இ.பி., 10, இ.ஏ., 7-இ, 13-இ., 17-இ.ஏ., 17-இ.பி., 19.இ, 20-இ, 3-இ.ஏ., 3-இ.பி., 14-இ, ஆகிய எண் கொண்ட ஏ.சி., பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ளது. 6-இ.ஏ., 6-இ.பி., எண் கொண்ட இ-பஸ்கள் புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு சின்னவீராம்பட்டினத்தை சென்றடையும். இந்த பஸ், அரிக்கமேடு, ஈடன்பீச், அரபிந்தோ ஆசிரம், பாரதி பூங்கா, மெரினா பீச், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை இணைக்கும். 10-இ.ஏ., 10-இ.பி., சுற்றுலா இ-பஸ் புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கோரிமேடு, ஜிப்மர், ஆரோவில், கோட்டக்குப்பம் வழியாக செல்லும். இதில் சென்றால் ஆரோவில், ஆரோ பீச்சினை பார்க்கலாம். அடுத்து 6-இ.ஏ., 6-இ.பி., 7-இ, 13-இ, 17-இ.பி., 19.இ, 20-இ, வழித்தட இ-பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு அரியாங்குப்பம், நோணாங்குப்பம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த இ-பஸ்சில் சென்றால் சுண்ணாம்பாறு படகு குழாமினை அடைந்து படகு சவாரி செய்யலாம். 3-இ.ஏ., 3-இ.பி., 14-இ., வழித்தட இ.பஸ்., முத்திரையர்பாளையம், பத்துக்கண்ணு வழியாக ஊசுடு ஏரியை காணும் வகையில் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.