கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு : வன்னியர் ஒருங்கிணைப்பு இயக்கம் மனு
புதுச்சேரி : வன்னியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இயக்க தலைவர் துளசிதாசன், சமூக நலத்துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு: புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து ஓ.பி.சி., எம்.பி.சி., மக்களை, மக்கள் தொகை அடிப்படையில் பிரித்து எம்.பி.சி., மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடும், ஓ.பி.சி., மக்களுக்கு 13 சத இடஒதுக்கீடும் செய்து நடைமுறைப்படுத்தி வந்தது. கடந்தாண்டு எம்.பி.சி.யில் இருந்த மீனவ மக்களை இ.பி.சி., என்ற பிரிவினராக அறிவித்து அவர்களுக்கு எம்.பி.சி.க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் 2 சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளித்து விட்டது. இதன் மூலம் அரசு தனி இடஒதுக்கீடு அளிப்பது என்ற கொள்கை முடிவில் இருப்பது தெரிய வருகிறது.இடஒதுக்கீட்டிற்கான மக்கள் தொகை கணக்கீடு 1994ம் ஆண்டின் புள்ளி விபரத்தையே கையாள்கிறது.அந்த கணக்கின்படி மீனவர்கள் தனி இடஒதுக்கீடு பெற்று சென்று விட்டதால், மீதமுள்ள எம்.பி.சி., மக்கள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 341 பேரில் வன்னியர் மட்டுமே 2 லட்சத்து 23 ஆயிரத்து 324 பேர் மக்கள் தொகை உள்ளனர். மீதமுள்ள 11 சாதியினரும் சேர்த்து 15 ஆயிரத்து 27 பேர் மட்டுமே உள்ளனர். இவ்வளவு மக்கள் தொகை இருந்தும், தனி இடஒதுக்கீடு இல்லாமல், தொகுப்பில் இருப்பதால் வன்னிய மக்கள் தொகைக்கு உரிய இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது என்ற நிலை உள்ளது. வன்னியருக்கு கல்வி, வேலைவாய்ப் பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண் டும். வன்னியருக்கு தனி இடஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.