ஓய்வு ஆசிரியர்கள் தவிப்பு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேச்சு
புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:அரசு உதவி பெறும் பள்ளி அனைத்திலும் 95 சதவீதம் அரசும், 5 சதவீதம் பள்ளி நிர்வாகமும் சம்பளம் வழங்குகின்றன. அரசு உதவி பெறும் பள்ளியில் தற்போது வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் பள்ளி நிர்வாகம் கட்டுகின்றன. அரசாங்கமும் 95 சதவீத தொகையை கொடுக்கின்றது. இதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் 5 சதவீதம் சரியாக கட்டுவதில்லை. கோர்ட் உத்தரவின்படி பள்ளி நிர்வாகம் 5 சதவீதம் கட்டினால் தான் அரசாங்கம் 5 சதவீதம் கொடுக்கும். இதனால் அப்பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நிலைகுலைந்துள்ளனர். தள்ளாத வயதில் தளர்ந்துபோய் உள்ளனர். பள்ளி நிர்வாகம் கட்டும் 5 சதவீதம் கூட தேவையில்லை. அரசு 95 சதவீதம் கொடுத்தால் கூட போதும் என்ற மனநிலையில் உள்ளனர். கடந்த 20 மாதமாக கிடைக்காமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.