பி.எஸ்.பாளையத்தில் சாலை பணி துவக்கம்
திருக்கனுார்: பி.எஸ்.பாளையத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர். மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் காலனிக்கு செல்லும் அனுகு சாலை பாட்கோ மூலம் 16 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அமைச்சர் சாய் சரவணன்குமார் முன்னிலை வகித்தார். இதில், அதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், பாட்கோ மேலாண் இயக்குநர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாதானுாரில் அங்கன்வாடி மையம் அமைத்தல், கொடாத்துார், கைக்கிலப்பட்டு, கே.ஆர்.பாளையம், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு கிராமங்களில் சாலை மேம்படுத்தும் பணிகளையும் அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து துவக்கி வைத்தார்.