உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன் டவரில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல்

மொபைல் போன் டவரில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல்

வில்லியனுார்: சேதராப்பட்டில் நேற்று மாலை போதையில் இருந்த பிரபல ரவுடி மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் சுமன், 33. இவர் மீது சேதராப்பட்டு, காலாப்பட்டு, திருபுவனை, டி.நகர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. பிரபல ரவுடியான இவர், தற்போது சேதராப்பட்டு அருகே உள்ள தமிழக பகுதியான ஆகாசப்பட்டு பாப்பாஞ்சாவடி பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரின் கேண்டினில் சப்ளையராக வேலை செய்து வந்தார். போதையில் கேண்டினில் இருந்தவர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டதால், வேலை விட்டு நிறுத்தி விட்டனர். இதனால் மன உளைச்சலடைந்த சுமன் நேற்று மாலை 5:30 மணியளவில் சேதரப்பட்டு விநாயகர் கோவில் அருகே உள்ள மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த சேதராப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டவர் மீது இருந்த சுமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும், கேண்டினில்  மீண்டும் வேலை கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என, போலீசாரிடம் தெரிவித்தார். அதையடுத்து, இரவு 7:30 மணியளவில் பார் கேண்டினில் இருந்து வந்தவர் மீண்டும் வேலை தருவதாக உறுதியளித்தார். அதையடுத்து, டவரில் இருந்து மெதுவாக கீழே இறங்கிய சுமன், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடினார். பின் தொடர்ந்து ஓடிய போலீசார், சுமனை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவம் சேதராப்பட்டு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ