உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேளாண் பொருட்களை சேமிக்க அதிநவீன சேமிப்பு கிடங்கு செல்வகணபதி எம்.பி., கோரிக்கை

 வேளாண் பொருட்களை சேமிக்க அதிநவீன சேமிப்பு கிடங்கு செல்வகணபதி எம்.பி., கோரிக்கை

புதுச்சேரி: விவசாய விளை பொருட்களை சேமித்து வைக்கும் வகையில், அதி நவீன சேமிப்பு கிடங்கு வேண்டும் என செல்வகணபதி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், ராஜ்யசபாவில் பேசியதாவது; மாம்பழ விவசாயிகளின் அவல நிலை குறித்து மத்திய வேளாண் அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த பருவத்தில் மாம்பழங்கள் மிகுதியாக விளைகின்றன. பெரிய அளவிலான அறுவடை இருந்த போதிலும், சந்தைப்படுத்தல் துறையில் ஒரு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில், வெங்காயம், தக்காளி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் அறுவடை செய்யப்படும் போது பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் அதி நவீன சேமிப்பு வசதிகளை உருவாக்க நமது அரசு ஊக்குவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், மார்க்கெட் கமிட்டி வளாகத்தின் தரையில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் திடீர் மழையால் நனைந்தன. இது விவசாயிகளின் தவறு அல்ல; சேமிப்பு வசதிகள் கிடைக்காததே காரணம். விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையைத் தீர்க்க, பருப்பு வகைகள், பழங்கள் காய்கறிகளுக்கான சரியான தட்ப வெப்பநிலையுடன் அதி நவீன சேமிப்பு வசதியை அரசு நிறுவ வேண்டும். அப்போது தான், விவசாயிகள் விளை பொருட்களை சாலைகளில் வீசுவதற்குப் பதிலாக, நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்து பலன் பெறமுடியும். மறுபுறம், மக்கள் தொகையும் வேகமாக அதிகரித்து வருவதால், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளுக்கான தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்படுகிறது. இவ்விஷயங்களை அரசு கருத்தில் கொண்டு,அதி நவீன சேமிப்பு வசதியை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ