சாரம் அரசு பள்ளியை மேம்படுத்த ஆய்வு
புதுச்சேரி: சாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்துவது குறித்து, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.புதுச்சேரி, சாரம் தென்றல் நகரில் எஸ்.ஆர்.சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை நேற்று பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையில் செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், கஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தலைமை ஆசிரியை அனிதா மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் பின்புறம் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அடிக்கடி நிரம்பி, தண்ணீர் வகுப்பறைக்குள் வருவதால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, வாய்க்காலை பார்வையிட்ட தலைமை பொறியாளர், உடனடியாக கழிவுநீர் வடிகால் வாய்க்காலை துார்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளை அறிவுறுத்தினர். இதில், பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.