மாற்று அரசை அமைத்திட இந்திய கம்யூ., பாடுபடும்
புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் எம்.எல்.ஏ., களால் ஸ்திரத்தன்மை இல்லாமல் தள்ளாடி வருவதாக இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார் மற்றும் ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பா.ஜ., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அரசின் மீது குற்றம் சுமத்துகின்றனர். புதிய அமைச்சருக்கு இன்றுவரை இலாகா வழங்கவில்லை. இது கூட்டணி ஆட்சியின் ஸ்திரத்தன்மையையே காட்டுகிறது. அமைச்சரவையில் இருந்த தலித் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு, தலித் விரோத கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்கவில்லை. இந்த நிர்வாக திறமையற்ற மக்கள் விரோத என்.ஆர்.காங்., பா.ஜ., அரசை அகற்றி, வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நலன் காக்கும் மாற்று அரசை அமைத்திட இந்திய கம்யூ., பாடுபடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.