சுற்றுலா படகு போக்குவரத்து மீண்டும் துவங்கியது
புதுச்சேரி: விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட சுற்றுலா படகு போக்குவரத்து, உரிமையாளர்கள் போராட்டத்திற்கு பின்,நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியது. வீராம்பட்டினம் பகுதியில் கடந்த 19ம் தேதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு, முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. அதைதொடர்ந்து, சுற்றுலா படகுப் போக்குவரத்தை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அரசின் நடவடிக்கையைக் கண்டித்து படகு உரிமையாளர்கள், சுற்றுலாத்துறை அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்,முதல்வர் ரங்கசாமி மற்றும் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து சுற்றுலா படகுகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து, சுற்றுலாத்துறை மூலம் உரிமம் பெறப்பட்ட சுற்றுலா படகுகளின் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் துவங்கியது. இந்நிலையில், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று வம்பாகீரப்பாளையம், பாண்டி மெரினா, அரிக்கன்மேடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, இயக்கப்பட்ட சுற்றுலா படகுகளை ஆய்வு செய்தனர். அதில், சுற்றுலா படகுகளின் உரிமம் மற்றும் முக்கிய ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும், பயணிகளுக்கு முறையாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும். அசம்பாவிதம் நடந்தால் மீட்பதற்கு டிரைவருடன் மேலும் ஒருவர் பணியில் இருக்க வேண்டும். தீயை அணைக்கும் கருவி, தகவல் தொடர்பு சாதனம் முறையாக வைத்திருக்க வேண்டுமெனஅறிவுறுத்தினர். முகத்துவாரம் பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.