மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி
வில்லியனுார்: வில்லியனுாரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. மத்திய அரசு பதிவாளர் பொது மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி முகாம் வில்லியனுார் ஆதித்யா பள்ளி வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு வடக்கு மாவட்ட சப் கலெக்டர் தயானந்த் டெண்டுல்கர் தலைமை தாங்கினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக இணை இயக்குனர் புவனேஸ்வரி, உதவி இயக்குனர் சக்திவேல் மற்றும் வில்லியனுார் தாசில்தார் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் புதுச்சேரி அரசு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சியில் வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் கேள்விகளை எவ்வாறு கேட்க வேண்டும். தகவல்களை முறையாக சேகரிக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினர்.