உத்தரகாண்ட் உதயநாள் விழா கவர்னர் மாளிகையில் கொண்டாட்டம்
புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் உதயநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், புதுச்சேரியில் வசிக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்திய கடலோரக் காவல் படையின் புதுச்சேரி பிரிவு தலைமை இயக்குநர் தசிலா, இந்திய கடலோரக் காவல் படையின் காரைக்கால் கமாண்டர் சவுமே சந்தோலா, புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று தேச ஒற்றுமை குறித்து விவாதித்தனர்.விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:மத்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் நடக்கும் இந்த கொண்டாட்டம் பல்வேறு மாநில மக்களிடையே ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பண்பாடு, கலை, விளையாட்டு, உணவுமுறை இன்னும் பல நல்ல பழக்கங்களை அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. அனைத்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வை பலப்படுத்துகிறது.நம்முடைய ஒன்றுபட்ட வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதன் வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சி அமைந்திருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றை விளக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது.