சாலைகளில் பட்டாசு குப்பைகள் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
புதுச்சேரி: பட்டாசு குப்பைகளை துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதால் உருவாகும் குப்பைகளை சாலைகளில் அப்படியே விடுவதினால் தெருக்கள் முழுவது அசுத்தமாகின்றன. அவை காற்றில் பறந்து கால்வாய்களில் விழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அவற்றை சுத்தம் செய்ய வரும் துாய்மைபணியாகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்த பின்பு உருவாகும் குப்பைகளை தண்ணீர் ஊற்றி அனைத்து அதனை தொட்டிகளில் சேகரித்து வைத்திருந்து தங்கள் பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.