உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
புதுச்சேரி: விதிமீறி நாய்கள் வளர்ப்பு மற்றும் கருத்தடை மையங்களுக்கு உழவர்கரை நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய விலங்கு நலன் வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றாமல் சிறிய இடங்களில் அதிக எண்ணிக்கைகளில் நாய்கள் வளர்ப்பதாகவும் மேலும் விலங்குகள் பிறப்பு கட்டுபாட்டு விதிகள் -2023 ஐ பின்பற்றாமலும் மற்றும் நகராட்சியின் உரிய அனுமதி பெறாமலும், நாய்களுக்கு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருத்தடைகள் மேற்கொள்வதாக தெரியவருகிறது. அவ்வாறு செய்வது விதிகள் -2023 ன்படி குற்றமாகும். நாய்கள் காப்பகம், அறுவை சிகிச்சை கூடங்கள் நடத்தும் தனிநபர் அல்லது தொண்டு நிறுவனங்கள், நகராட்சி விலங்குகள் பிறப்பு கட்டுபாட்டு கண்காணிப்பு குழு கால்நடைத்துறையின் அனுமதியை 15 நாட்களுக்குள் பெறுமாறு எச்சரிக்கப்படுகிறது. உரிய அனுமதி பெறாதவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960 படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இது சம்மந்தமாக நகராட்சிக்கு புகார்களை 1800-599-1810-ல் அலுவலக நேரங்களில் தெரிவிக்குமாறும் அல்லது 7598171674 என்ற வாட்ஸ்- ஆப் எண்ணில் தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.