ஓட்டு திருட்டை தடுப்பது எப்படி மகளிர் காங்., தலைவி யோசனை
புதுச்சேரி: ஓட்டு திருட்டு நடப்பதை எப்படி தடுக்கலாம் என, மகளிர் காங்., தலைவி நிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; பா.ஜ., தேர்தல் ஆணையத்தை கையில் வைத்து கொண்டு, தங்களுக்கு ஆதரவாக பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து வருகின்றனர். சிறுபான்மையினர், தலித்துகள், பெண்களின் ஓட்டுகளை, போலியான மொபைல் மூலம் ஓ.டி.பி., யை கொண்டு நீக்கம் செய்து, அவர்களுக்கு தேவையான நடமாடும் ஓட்டாளர்களை பதிவு செய்கின்றனர். ஓட்டு திருட்டை தடுக்க ஒருவர் வாக்களிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் வசிக்க வேண்டும். முகவரி மாற்றும் போது, முன்பு குடியிருந்த வீட்டின் முகவரி 3 ஆண்டு குடியிருந்த, சான்றிதழ் தாசில்தார், கிராம அதிகாரியிடம் சான்றிதழ் வாங்கிருக்க வேண்டும். எந்த இடத்திற்கு ஓட்டை மாற்றுகிறார்களோ, ஓட்டு ரத்து செய்ததற்கான சான்றிதழ், 3 ஆண்டு இருப்பிட சான்றிதழையும் வைத்தால் மட்டுமே ஓட்டை மாற்ற முடியும் என சட்டம் கொண்டுவர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தினால், ஓட்டுத்திருட்டை தடுக்க முடியாது. மத்தியில் ஆளும் கட்சியை பொறுத்து, மாநிலங்களில் வெற்றி அமையும். மேலும், மாநில கட்சிகளின் உரிமை பறிக்கப்டும். இதன் விளைவாக மாநிலங்களில் இறையாண்மை, கலாச்சாரம், மொழி, வளர்ச்சி விகிதங்கள் அழிக்கப்படும். ஆகையால் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.