இலங்கை-நியூசி., மோதல் ரத்து * பெண்கள் உலக கோப்பை தொடரில்
கொழும்பு: இலங்கை, நியூசிலாந்து பெண்கள் அணிகள் மோதிய உலக கோப்பை லீக் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்தானது. இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நேற்று, கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. நல்ல துவக்கம்இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி, விஷ்மி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சமாரி அரைசதம் கடந்தார். 23.1 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்த போது, சோபி பந்தில் சமாரி (53) அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்தில், ரோஸ்மேரி பந்தில் விஷ்மி (42) வெளியேறினார். ஹர்ஷித்தா 31 பந்தில் 26 ரன் எடுத்தார். நிலாக் ஷிகா 'வேகம்'மீண்டும் அசத்திய சோபி, கவிஷா (4), பியுமியை (7) திருப்பி அனுப்பினார். மறுபக்கம் நிலாக் ஷிகா பவுண்டரிகளாக விளாசினார். 26 பந்தில் அரைசதம் கடந்தார். இலங்கை பெண்கள் ஒருநாள் அரங்கில் இது அதிவேக அரைசதம் ஆனது. கடைசி 10 ஓவரில் இலங்கை அணி 80 ரன் சேர்த்தது. எனினும், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 256 ரன் மட்டும் எடுத்தது. நிலாக் ஷிகா (55 ரன், 28 பந்து, 7x4, 1x6), அனுஷ்கா (6) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் சோபி, அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார். பெண்கள் உலக கோப்பை அரங்கில் இலங்கை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது. முன்னதாக 2013ல் இந்தியாவுக்கு எதிராக 282/5 ரன் (மும்பை) எடுத்தது முதலில் உள்ளது. பின் மழை பெய்ததால், போட்டி பாதியில் ரத்தானது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.