வெண்கலம் வென்றார் ஆனந்த்குமார்: உலக விளையாட்டு ஸ்கேட்டிங்கில்
செங்டு: உலக விளையாட்டுக்கான 'ஸ்கேட்டிங்' போட்டியில் இந்தியாவின் ஆனந்த்குமார் வெண்கலம் வென்றார்.சீனாவில், உலக விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர் (10 வீரர், 7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.ஆண்களுக்கான 'இன்லைன் ஸ்பீடு ஸ்கேட்டிங்' 1000 மீ., 'ஸ்பிரின்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார், ஆர்யன்பால் சிங் குமன் அரையிறுதிக்குள் நுழைந்தனர். இதில் 2வது இடம் பிடித்த ஆனந்த்குமார், பைனலுக்கு முன்னேறினார். ஆர்யன்குமார் 7வது இடம் பிடித்து வெளியேறினார்.அடுத்து நடந்த பைனலில் இலக்கை ஒரு நிமிடம், 22.482 வினாடியில் கடந்த ஆனந்த்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் உலக விளையாட்டு 'ரோலர் ஸ்கேட்டிங்' பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஆனந்த்குமார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கம். ஏற்கனவே ரிஷாப் யாதவ் (வில்வித்தை, வெண்கலம்), நம்ரதா பத்ரா (உஷு, வெள்ளி) பதக்கம் வென்றிருந்தனர்.
இது அதிகம்
உலக விளையாட்டில், ஒரு சீசனில் இந்தியாவுக்கு இம்முறை அதிக பதக்கம் (3) கிடைத்துள்ளது. இதற்கு முன், 1989ல் ஜெர்மனியில் நடந்த 3வது சீசனில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் கிடைத்திருந்தது. உலக விளையாட்டு அரங்கில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்துள்ளது.