மூன்றாவது சுற்றில் வந்திகா * செஸ் உலக கோப்பை தொடரில்...
பதுமி: ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் இரண்டாவது சுற்று நடந்தது. இந்தியாவின் பத்மினி, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ராவை சந்தித்தார். முதல் இரு போட்டியில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது. முதல் இரு போட்டி 'டிரா' ஆகின. மூன்றாவது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பத்மினி, 58வது நகர்த்தலில் வென்றார். முடிவில் 3.0-2.0 என வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் வந்திகா, உக்ரைவின் அனா உஷேனினா மோதினர். முதல் இரு போட்டி முடிவில் 1-1 என போட்டி சமன் ஆனது. நேற்று நடந்த 'டைபிரேக்கரில்' அசத்திய வந்திகா, 3.0-2.0 என வெற்றி பெற்றார். இந்தியாவின் பிரியங்கா 1.0-3.0 என போலந்தின் கிளாடியாவிடம் தோற்றார். வைஷாலி, ஹரிகா, திவ்யா, ஹம்பி, வந்திகா, பத்மனி என 6 இந்திய வீராங்கனைகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.