| ADDED : ஜூன் 04, 2024 10:44 PM
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில் ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து விளையாட போபண்ணா முடிவு செய்துள்ளார்.பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26-ஆக. 11) நடக்கவுள்ளது. இதற்கான டென்னிஸ் இரட்டையர் போட்டியில் 32 அணிகள் மோதும். 'டாப்-10' பட்டியலில் உள்ள வீரர்கள் தங்களுடன் இணைந்து விளையாடும், சக வீரரை தேர்வு செய்யலாம்.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முடிந்த பின் ஜூன் 10ல் தரவரிசை வெளியாக உள்ளது. இதில் 'டாப்-300' பட்டியலில் இடம் பிடித்த வீரர்கள், முன்னணி வீரர்களுடன் ஜோடி சேரலாம்.இந்தியாவை பொறுத்தவரையில் சீனியர் வீரர் ரோகன் போபண்ணா, 44, உலக இரட்டையர் தரவரிசையில் 'நம்பர்-4' வீரராக உள்ளார். இதனால், இரட்டையர் போட்டியில் தன்னுடன் களமிறங்கும் மற்றொரு வீரரை, போபண்ணா தேர்வு செய்தால் அனுமதி வழங்க தயார் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்து இருந்தது.இரட்டையர் தரவரிசையில் 54 வதாக உள்ள யூகி பாம்ப்ரி, 82வது இடத்திலுள்ள ஸ்ரீராம் பாலாஜி என இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க இருந்தது.இதனிடையே, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடிக்கு எதிராக, ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுயல் மார்டினஸ் போராடி தோற்றது.இப்போட்டியில் ஸ்ரீராம் பாலாஜியின் திறமை பிடித்துப் போக, பாரிஸ் ஒலிம்பிக்கில் இவருடன் இணைந்து களமிறங்க முடிவு செய்துள்ளார்.இதுகுறித்து போபண்ணா ஏ.ஐ.டி.ஏ.,க்கு கடிதம் எழுதியுள்ளார். ஏ.ஐ.டி.ஏ., பொதுச் செயலர் அனில் துபார் கூறுகையில், ''ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்து போபண்ணா கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஸ்ரீராம் பாலாஜி சிறப்பாக விளையாடியுள்ளார் என்பதால், போபண்ணா கோரிக்கைக்கு அனுமதி தருவோம்,'' என்றார்.