மாமல்லபுரம், : கூவத்துார் அடுத்த முகையூரில், கள்ளழக பெருமாள் கோவில், கிராம கோவிலாக விளங்குகிறது. கள்ளழகர், சுந்தரவல்லி தாயார் வீற்றுள்ளனர். வைணவ பக்தர்கள், வடதிருமாலிருஞ்சோலையாக கருதி வழிபடுகின்றனர். கள்ளழகர், கடந்த 2012 முதல், சித்திரை பவுர்ணமி நாளில், வாயலுார் - கடலுார் பாலாற்றில் இறங்கி, உற்சவ வைபவம் காண்கிறார்.சித்திரை பவுர்ணமியன்று, அதிகாலை கோவிலில் சுவாமியருக்கு திருமஞ்சனம் வழிபாடு நடத்தி, குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, கூவத்துாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் சென்று, ஆண்டாள் சூடிய மாலையை பெற்று, பாலாற்றை அடைவார்.பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் மாலையை சூடி திருமஞ்சனம் நடந்து, ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.வேப்பஞ்சேரி, கூவத்துார், வடபட்டினம், தென்பட்டினம் பகுதிகள் வழியே, சுவாமி கடக்கும் நிலையில், பக்தர்கள் தரிசிப்பர்.கோவில் கும்பாபிஷேகத்தை, ஜூன் 12ம் தேதி நடத்தவுள்ளதால், இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தவிர்க்கப்பட்டுள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.