உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

பார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, சென்னையில் நடக்க உள்ள 'பார்முலா - 4' கார் பந்தயத்துக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளார். இம் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டது.

பாதுகாப்பு சாதனங்கள்

இதை எதிர்த்து, அ.தி.மு.க., உட்பட பலர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இந்த மனு குறித்து நேற்று குறிப்பிடப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்காத அமர்வு, இந்த விவகாரம் அவசரமாக விசாரிக்க வேண்டிய வழக்கல்ல என தெரிவித்தது.தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத், தாக்கல் செய்த மனு:சென்னையில் பார்முலா - 4 கார் பந்தயம், வரும் 31, 1 ம் தேதிகளில் நடக்க உள்ளது. பொது சாலையில் நடக்கும் இந்தப் பந்தயத்துக்கு, மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது.பொது சாலையில் பந்தயம் நடக்க பந்தய கார்களுக்கு அனுமதி வழங்கினால், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பந்தய கார்களில் சாலை பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.பந்தயம் நடத்துவதற்காக, தற்காலிகமாக சாலையை மூடுவதற்கு அனுமதி வழங்க, மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. பந்தயம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்குவது, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்துக்கு முரணானது.பொது மக்களின் நலன்களை காக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. ஆனால், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடன் அரசும் கை கோர்த்து உள்ளது. பந்தயம் நடக்கும் போது, அண்ணாசாலை, சிவானந்தசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து பாதிக்கப்படும்.இந்தப் பந்தயத்தை மாநில அரசு நடத்துகிறதா அல்லது தனியார் நிறுவனம் நடத்துகிறதா என்பதை, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், பந்தயம் சுமுகமாக நடப்பதை உறுதி செய்யும்படி, தலைமைச் செயலர் மற்றும் இதர துறை செயலர்களை, அவர் கேட்டு கொண்டுள்ளார்.

எதிர்பார்ப்பு

கார் பந்தயம் நடத்துவது அரசின் வேலை அல்ல; இதை கண்காணிப்பதற்கு, அரசுத்துறை செயலர்களுக்கு அதிகாரம் இல்லை.பந்தயப் பாதையானது, ஓட்டுவதற்கு தகுதியற்றதாக உள்ளது. இதில் பந்தயம் நடத்த எப்படி அனுமதி அளித்தனர் என்பது வியப்பாக உள்ளது.பந்தயத்தை நடத்த, அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, கார் பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன நிறுத்தம்

கார் பந்தயத்தை காண வரும் ரசிகர்களுக்கு, 18 இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கென ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்துள்ளனர்.சென்னை பல்கலை, பிரஸ் கிளப் சாலை, ஓமந்தாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம், சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை மேம்பால ரயில் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மைதானம், கேந்திர வித்யாலயா பள்ளி மைதானம், வி.ஐ.பி.,வாகனங்கள் பல்லவன் இல்லத்தில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட இடத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்

1 ராஜாஜி சாலை - வாலாஜா சாலை வரை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.2 காமராஜர் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் அனைத்தும், வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும். 3பெரியார் சிலை முதல் பல்லவன் சாலை வரையிலான அண்ணாசாலை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. ஒரு வழியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்றப்படும். 4 கொடி மரச்சாலை முழுதும் வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்படும். 5 அண்ணாசாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் அனைத்தும், பல்லவன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

நிழற்குடை மறைப்பு

சென்னை தீவுத்திடல் பகுதியில் கார் பந்தயம் நடக்கும் சாலையின் இரண்டு புறமும், இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சிவனாந்த சாலையிலும் ஒருபுறத்தில் பார்வையாளர் மடம் அமைக்கப்படுகிறது. இதனால், தீவுத்திடல் சுற்றியுள்ள சாலைகளில் ஒரு பாதி வழியில், இரண்டு புறங்களிலும் வாகனங்கள் அனுமதி திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளால், தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. போட்டியில் பங்கேற்கும் கார்கள், அண்ணா சாலையில் இருந்து, சிவனாந்த சாலையில் திரும்பும் வகையில் உள்ளது. ஆனால், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் நுழைவு வாயில் தவிர, இரண்டு புறங்களிலும் இரும்பு தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்து செல்வோரில் பெரும்பாலானோர், பேருந்தை நம்பியுள்ளனர். மருத்துவமனை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையும் இரும்பு தட்டிகளால் அடைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ