உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சதுரங்கப்பட்டினம் இருளர் வீடுகள் பருவ மழைக்குள் முடிக்கப்படுமா?

சதுரங்கப்பட்டினம் இருளர் வீடுகள் பருவ மழைக்குள் முடிக்கப்படுமா?

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம் இருளர்களுக்கு புதிதாக கட்டப்படும் வீடுகள், கட்டுமானம் தாமதமாவதால், மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சி, மெய்யூர் மரத்தோட்டம் பகுதியில் இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். கூலித்தொழில் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், குடும்பத்திற்கு, தலா 2.5 சென்ட் இலவச நிலம் வழங்கியது. துவக்கத்தில், அரசு சார்பில், 15 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. மற்றவர்கள் குடிசையில் வசித்தனர்.கடந்த 2004 சுனாமி பாதிப்பை தொடர்ந்து, தண்டரை இருளர் பழங்குடி பெண்கள் அமைப்பு, 17 பேருக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டியது. வீடுகள் தரமாக இன்றி, நாளடைவில் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் அச்சத்தில் வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில், கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன. தற்போது, 70 குடும்பத்தினர் வீடுகள் இன்றி கூடாரத்தில் சிரமத்துடன் வசித்து வருகின்றனர்.வடகிழக்கு பருவமழை காலத்தில், வருவாய்த்துறை, தற்காலிக முகாமில் இவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். வீட்டுமனை பட்டா, மூதாதையர் பெயரில் உள்ளதை, வாரிசுதாரர் பெயரில் மாற்றக் கோரி முறையிட்டும், கிடப்பில் போடப்பட்டது.அவர்களின் பாதிப்புகள், அவலநிலை குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக, தலா 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 15 வீடுகள் கட்டப்படுகின்றன. எட்டு மாதங்களுக்கு முன், பணிகளை துவக்கியும், முழுமையாக முடிக்கப்படாமல் தாமதமாகிறது. மழைக்காலத்திற்குள் விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என, இருளர் இன மக்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ