மாமல்லபுரம்:தமிழக கடற்பகுதியில் மீன்வளத்தை பெருக்க, ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதி முதல், ஜூன் 15ம் தேதி வரை, மீன்பிடி தடைக்காலத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்த இத்தடை, இன்றுடன் முடிகிறது.ஆழ்கடலில் மீன்பிடிக்கும், 'லாஞ்ச்' படகுகளுக்கே இத்தடை. செங்கல்பட்டு மாவட்டத்தின், 36 மீனவ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், கரையோரம் மீன் பிடிப்பவர்கள் என்றாலும், தடையை கடைப்பிடித்தனர். தடைக்காலத்தில், மீன்பிடி படகுகளின் தேய்மானத்தை பழுதுபார்த்து, புதிய வண்ணம் தீட்டி பராமரித்தனர். கிழிந்த வலைகளை சரி செய்தனர்.தடைக்கால நிவாரணமாக, லோக்சபா தேர்தலுக்கு முன், 7,801 பேருக்கு, தலா 8,000 ரூபாயை, தமிழக அரசு வழங்கியது. இன்றுடன் தடைக்காலம் முடிந்து, நாளை முதல் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
கவிழ்ந்த படகு
மாமல்லபுரம் மீனவர் சந்திரன் என்பவர், படகில் சிலருடன் சென்று மீன் பிடித்து திரும்பினர். காலை 9:00 மணிக்கு, கரைப்பகுதியை நெருங்கியபோது, அலையின் சீற்றத்தில் படகு சிக்கி கவிழ்ந்தது. அவர்களை, கரையில் இருந்தோர் மீட்டனர். மீன்களுடன் இருந்த வலை, கடலில் மூழ்கியது. அதை கண்டறிய இயலாத நிலையில், மீன் இன்றி விழுந்த மற்றொரு வலையை இழுத்து மீட்டனர்.