உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்ட கோவில்களில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

செங்கை மாவட்ட கோவில்களில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில், இலவச திருமணம் நடத்துவதாக, கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, முக்கிய கோவில்களில் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது. அதன்படி, திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் முதல் முறையாக நேற்று, நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தலா 60,000 ரூபாய் மதிப்பில், 4 கிராம் தங்கத்தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வொரு தம்பதியின் குடும்பத்தைச் சேர்ந்த தலா 20 பேருக்கு, காலை உணவும் வழங்கப்பட்டது.

மறைமலைநகர்

சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையிலுள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலில், அறநிலையத் துறை சார்பில் நேற்று காலை, கோவில் பிரகாரத்தில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது.நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முகூர்த்த நாள் இல்லாததால், ஒரு ஜோடி மட்டுமே திருமணத்திற்காக பதிவு செய்து இருந்தது.

மதுராந்தகம்

மதுராந்தகம் வட்டம், திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில், நேற்று காலை, ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடந்தது.அரசு சார்பாக வழங்கப்படும் திருமணத்திற்கான தங்கத் தாலி, கட்டில், பீரோ, மெத்தை, சீர்வரிசை சாமான்கள் உள்ளிட்டவை இந்த ஜோடிக்கு வழங்கப்பட்டன. இவர்களது உறவினர்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை