அச்சிறுபாக்கம், : செங்கல்பட்டு மாவட்டத்தில், சித்தாமூர் ஒன்றியம் தவிர்த்து, அச்சிறுபாக்கம், லத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்துார், புனித தோமையார் மலை மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட 7 ஒன்றியங்களில், 55 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் எலப்பாக்கம், மோகல்வாடி, மாத்துார், அகிலி, பாப்பநல்லுார், கோழியாளம் மற்றும் தீட்டாளம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் நேற்று துவங்கப்பட்டது.இதன் வாயிலாக, 7 பள்ளிகள் சேர்த்து, 251 மாணவ - மாணவியர் பயன் பெறுகின்றனர்.எலப்பாக்கம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடந்த துவக்க விழாவில், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், வட்டார மேலாளர் தானப்பன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அதேபோல், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுாரில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில், காலை உணவு திட்டத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.இதில், கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி மற்றும் அரசு துறை அதிகாரிகள், பள்ளி மாணவ- - மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதேபோல், திருப்போரூர் ஒன்றியத்தில் 14 பள்ளிகளில், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கோவளம் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில், நேற்று காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர், பள்ளி மாணவ - மாணவியருக்கு சர்க்கரை பொங்கலுடன் உணவு பரிமாறினர்.வட்டார கல்வி அலுவலர் சிவசங்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.