செங்கல்பட்டு:வீட்டுமனை பட்டா மாற்றித் தருவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட், நேற்று தீர்ப்பளித்தது.சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், 2013ம் ஆண்டு, அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் கிராமத்தில், வீட்டுமனை வாங்கினார்.அதன்பின், அவரது உறவினர்கள் தமிழ்ராஜ், சரஸ்வதி ஆகியோருக்கு, தலா ஒரு வீட்டுமனை வாங்கிக் கொடுத்தார்.வீட்டுமனை பட்டா மாற்றம் செய்ய, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, 59,யை அணுகினார்.பட்டா மாற்றம் செய்து தர, 12,000 ரூபாய் லஞ்சமாக புவனேஸ்வரி கேட்டுள்ளார். முன்பணமாக, 5,000 ரூபாய் கொடுக்குமாறும், பாஸ்கரனிடம் வற்புறுத்தியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத பாஸ்கரன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், அதே ஆண்டு புகார் செய்தார். அதன்பின், ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, அவரிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.அதை, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரியிடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கை, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றம் செய்தனர்.அதன்பின், இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது.வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், புவனேஸ்வரிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.