மேம்பாலத்தில் தொங்கும் வடங்கள் விபத்து அபாயம் இருப்பதால் பீதி
தாம்பரம்: தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., -வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.இம்மேம்பாலத்தை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. அதிக போக்குவரத்து உடைய, முக்கியமான இம்மேம்பாலத்தில் மின் கம்பங்களில், ஏகப்பட்ட தனியார் வடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு கம்பத்திலும், வரைமுறையின்றி 10, 15 வடங்கள் கட்டப்பட்டு, தொங்கிக் கொண்டிருக்கின்றன. காற்று அடித்தாலோ, மழை பெய்தாலே அவை அறுந்து, மேம்பாலத்தின் மீதும், ஜி.எஸ்.டி., சாலையிலும் விழ வாய்ப்புள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வடத்தில் சிக்கி விபத்தை சந்திக்கும் அபாயம் அதிகம் உள்ளது.சமீபத்தில் வடங்கள் அறுந்து, அவ்வழியாக சென்ற பேருந்து மீது விழுந்ததில், அவற்றை அகற்ற தாமதமானது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் கட்டப்பட்டு, தொங்கிக் கொண்டிருக்கும் வடங்களை அப்புறப்படுத்தி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வர, போக்குவரத்து போலீசார், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.