கூடலுார் ஏரிக்கரை சாலையில் தடுப்பு கம்பி அமைக்க கோரிக்கை
மறைமலைநகர்மறைமலைநகர் நகராட்சி கூடலுார் ஏரிக்கரை 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சுற்றியுள்ள மட்டண ஓடை, கோகுலாபுரம், கருநிலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர் வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். கூடலுார் ஏரிக்கரை கலங்கல் பகுதியில் சாலை சற்று வளைந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகை ஏதும் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் மூன்று இடங்களில் முக்கிய வளைவுகள் உள்ளன. வேகமாக வரும் புதிய வாகன ஓட்டிகள் சாலை ஓரம் தடுப்புகள் இல்லாததால் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் இந்த பகுதியில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.