மையத்தடுப்பில் மோதி நொறுங்கிய டேங்கர் லாரி
திருப்போரூர், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் உடையது. இரு வழிப்பாதையாக இருந்த சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சாலையின் நடுவே மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.செம்பாக்கம் அரசு பள்ளி, மின்வாரிய அலுவலகம், சுண்ணாம்பு கால்வாய், கொட்டமேடு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையத் தடுப்பில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், எச்சரிக்கை பதாகை போதுமான அளவில் அமைக்கப்படவில்லை. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் மையத்தடுப்பு இருப்பதை அறியாமல், அதில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது.அந்த வகையில் நேற்று, கொட்டமேடு அருகே உள்ள மையத்தடுப்பில், பால் டேங்கர் லாரி ஒன்று மோதி, விபத்தில் சிக்கியது.இதில், லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, மையத்தடுப்பு அமைக்கப்படும் இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் எச்சரிக்கை பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.