உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தையூர் பேருந்து பணிமனை திட்டம் 10 ஆண்டுகளாக தொடரும் இழுபறி

தையூர் பேருந்து பணிமனை திட்டம் 10 ஆண்டுகளாக தொடரும் இழுபறி

திருப்போரூர்:சென்னை உள்ளிட்ட இடங்களிருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் 400க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், திருவான்மியூர், தாம்பரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணிமனைகளில் நிறுத்தப்படுகின்றன. இதையடுத்து, பேருந்துகள் பழுதடைந்தால், பழுது நீக்கம் செய்வதற்காக, இந்த பணிமனைகளில் இருந்து பராமரிப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் வருகின்றனர். இவர்கள் வந்து பேருந்தை சீரமைக்க நீண்ட நேரம் ஆவதால், காலவிரயம், எரிபொருள் வீணாகுதல், கூடுதல் செலவினம் ஆகியவை ஏற்படுகின்றன. அதேபோல், மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிக்கு இரவு பணியில் இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், சென்னைக்கு சென்று, பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.தையூர் பகுதியில் பணிமனை அமைக்கப்பட்டால், இந்த தடத்தில் பணியாற்றுவோர் விரைவில் வீடு திரும்பவும், மீண்டும் பணிக்கு வரவும் எளிதாக இருக்கும். எனவே, கடந்த 2012ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபை கூட்டத்தொடரில், விதி எண் 110ன் கீழ், ஓ.எம்.ஆர்., சாலை, திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில், மாநகர போக்குவரத்து பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, 11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதை, பகுதிவாசிகளும் பயணியரும் வரவேற்றனர். ஆனால், பணிமனை அமைவதற்கான அடுத்தகட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. திட்டம் கிடப்பில் உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, அரசு கிடப்பில் போட்டுள்ள திட்டத்தை நிறைவேற்ற, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் மற்றும் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ