பஸ்சில் போன் திருடிய இருவருக்கு சரமாரி அடி
தாம்பரம்:மதுரையைச் சேர்ந்தவர் ரஜித், 53. நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, கிளாம்பாக்கத்திற்கு பேருந்து ஏறினார்.கூட்டத்தை பயன்படுத்தி, ரஜித்தின் மொபைல் போனை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜிவ், 19, மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திருடினர். இதை கவனித்த சக பயணியர், இருவரையும் சரமாரியாக தாக்கி, தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவர்களை கைது செய்த போலீசார், பயணியர் தாக்கியதில் காயமடைந்த இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதே பேருந்தில், மேலும் மூன்று போன்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.