உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீராணம்குன்னம் அரசு பள்ளியில் 118ம் ஆண்டு விழா விமரிசை

வீராணம்குன்னம் அரசு பள்ளியில் 118ம் ஆண்டு விழா விமரிசை

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த வீராணம்குன்னம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த 1907ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.பள்ளி நுாறு ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பாக காமராஜர் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேர், விளையாட்டுப் பொருட்கள், இன்வெர்டர் உள்ளிட்டவை கல்வி சீராக வழங்கப்பட்டன.மேலும் பள்ளியில் யோகா, இசைப் பயிற்சி, சிலம்பாட்டம் உள்ளிட்ட பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆண்டு விழா கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தன. கலை நிகழ்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இள்ளலுார் அரசு பள்ளி

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய இள்ளலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கடந்த 1923ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி துவக்கப்பட்டு, நுாறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மாலை 5:00 மணியளவில், நுாற்றாண்டு விழா நடந்தது.விழாவில், முன்னாள் மாணவர்களான பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என, 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்பள்ளியில் பயின்று உயர்நிலை அடைந்தவர்கள் பள்ளியை பாராட்டியும், பழைய நினைவுகளை பகிர்ந்தும் பேசினர். தொடர்ந்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.கல்வியில் சிறந்த மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும், இப்பள்ளியில் முன்பு பணிபுரிந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை