உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் முகாம் வண்டலுாரில் 1,200 பேர் மனு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் வண்டலுாரில் 1,200 பேர் மனு

வண்டலுார்:வண்டலுாரில் இரண்டாம் கட்டமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடைபெற்றது. இதில், 1,200க்கும் மேற்பட்ட நபர்கள், கோரிக்கை மனுக்களை அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த ஜூலை 24ம் தேதி, சமூக நலக்கூடத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, வாலாஜாபாத் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், தமிழக அரசின் 40 துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இம்முகாமில், ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பித்தல் என, ஆதார் அட்டை சேவைக்காக 300க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். தவிர, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையில் பெயரை இணைக்க 183 பெண்கள் விண்ணப்பித்தனர். இதுபோல் பிற துறைகளின் சேவைகளைப் பெற, 800க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய முகாம் மாலை 3:00 மணி வரை நடைபெற்றது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் பணியாற்றிய ஊழியர்கள், முகாம் முடியும் நேரத்திற்கு முன்னரே அரங்கை மூடி விட்டுச் சென்றால், அந்த அரங்கிற்கு வந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி