பட்டா திருத்தத்திற்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை
செங்கல்பட்டு:சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட பட்டாவில், சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதை மாற்றித்தரக்கோரி, சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் கன்னியப்பன், 68, என்பவரை, 2010ம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி அணுகினார்.பட்டாவில் சர்வே எண்ணை திருத்தி வழங்குவதற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, முருகேசனிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதன்பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிக்கு மாற்றம் செய்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது.வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலர் கன்னியப்பனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.அபராதத் தொகையை கட்டத்தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.