உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்த 47 வீடுகள் அகற்றம்

சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்த 47 வீடுகள் அகற்றம்

துரைப்பாக்கம்:சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 வீடுகள், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கடும் எதிர்ப்பு தெரிவித்த எட்டு ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை மாநகராட்சியின் சோழிங்கநல்லுார் மண்டலம், 195 வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், வி.பி.ஜி., அவென்யு விரிவு மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில், சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து 47 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இப்பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என அறிவித்து, வீடுகளை காலி செய்யும்படி, கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அப்பகுதியினர், 'தொடர்ந்து 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இடிக்க அனுமதிக்க மாட்டோம்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வனத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர் நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று வருவாய்த்துறையினர், வனத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், பலத்த போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை அகற்ற வந்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் சாலையில் அமர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களான லட்சுமி, 45, பத்மா, 50, பன்னீர்செல்வம், 55, ராஜா, 25, துரை, 23, ராமலிங்கம், 70, செல்வம், 58, ஸ்ரீராம், 45, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.அவர்களில் லட்சுமி மயங்கி விழுந்ததால் அவரை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலை விடுவிக்கப்பட்டனர். இதனிடையே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பாளர்கள் கைது

சென்னை, வேளச்சேரியில் 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, ஆக்கிரமிப்பு போக தற்போது, 55 ஏக்கர் பரப்பளவாக சுருங்கி உள்ளது. கரையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து, ஏரி மோசமடைந்தது. இந்நிலையில், நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சி.எம்.டி.ஏ., சார்பில், வேளச்சேரியில் 19.40 கோடி ரூபாயில், ஏரியில் படகு சவாரியுடன், 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கும் பணியை, அக்.,30 ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் கரையிலும், 800க்கும் மேற்பட்ட ஆக்கிமிரப்பு வீடுகள் உள்ளன. இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை, நீர்வளத்துறை வருவாய்த்துறை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறையின் இணைந்து, துவக்கியுள்ளனர். வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேளச்சேரி, ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 400 க்கும் மேற்பட்டோர், வேளச்சேரி 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சாலைக்கு வர விடாமல் தடுத்து தடுப்புகளை போட்டனர். அதையும் மீறி மறியலில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அருகில் உள்ள திருமணமண்டபத்தில் அடைத்து வைத்தனர். நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, இரண்டு நாள் அவகாசம் அளித்ததால் ஆக்கிரமிப்பாளர்கள் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப் படுவோரில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ