50 கிலோ குட்கா பறிமுதல் சூணாம்பேடில் இருவர் கைது
சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில் சோதனை நடத்திய போலீசார், 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்ததுடன், அவற்றை விற்ற இருவரையும் கைது செய்தனர். சூணாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில், தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் அரசூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், 37, என்பவர், குட்கா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. உடன், அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கடப்பாக்கம் அடுத்த கப்பிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், 45, என்பவரிடம் இருந்து, குட்காவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பின், செந்திலையும் போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட இருவரிடமும் இருந்து, 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவர் மீதும் வழக்கு பதிந்த அரசூர் போலீசார், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.