விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் 85 மாணவர் சேர்க்கை
செங்கல்பட்டு:விஜயதசமியை முன்விட்டு, செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளில், 85 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இந்த வட்டாரங்களில் தொடக்கப் பள்ளிகள் 481, நடுநிலைப் பள்ளிகள் 188 என, மொத்தம் 669 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு, மாவட்டத்தில் எட்டு வட்டாரத்தில் துவக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க, 85 மாணவர்கள் சேர்க்கை, நேற்று முன்தினம் நடந்தது. இதில் எல்.கே.ஜி., 13 மாணவர்கள், யு.கே.ஜி., ஒன்று, முதல் வகுப்பில் 48, இரண்டாம் வகுப்பில் ஏழு பேர் சேர்ந்தனர். மூன்றாம் வகுப்பில் நான்கு பேர், நான்காம் வகுப்பில் ஆறு பேர், ஐந்தாம் வகுப்பில் இரண்டு பேர் சேர்ந்தனர். மேலும் ஆறாம் வகுப்பில் மூன்று பேர், எட்டாம் வகுப்பில் ஒருவர் என, மொத்தம் 85 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.