உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்து ஏற்படுத்தும் தடுப்பு சுவர் வண்டலுாரில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

விபத்து ஏற்படுத்தும் தடுப்பு சுவர் வண்டலுாரில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

வண்டலுார், வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில், விபத்து ஏற்படுத்தும்படி இடையூறாக உள்ள தடுப்புச் சுவரை அகற்றி, அணுகு சாலையை அகலப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெருங்களத்துாரில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், கேளம்பாக்கம் நோக்கி பயணிக்க விரும்பும் வாகன ஓட்டிகள், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு முன், 200 மீட்டர் துாரத்தில் உள்ள அணுகு சாலைக்கு திரும்ப வேண்டும். இந்த அணுகு சாலை துவங்கும் இடத்தில், சாலைக்கு இடையூறாக தடுப்புச் சுவர் உள்ளது. இந்த தடுப்புச் சுவர், 10 அடி துாரத்திற்கு ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்துள்ளதால், அணுகு சாலைக்கு எளிதாக திரும்ப வேண்டிய வாகனங்கள், வலது பக்கம் பயணித்து, அதன் பின் அணுகு சாலைக்குள் நுழைகின்றன. இதனால், புதிதாக இந்த வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அணுகு சாலையின் துவக்கத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். மேலும், அணுகு சாலை அகலத்தை அதிகப்படுத்தி, வாகனங்கள் எளிதாக சென்று திரும்பும்படி மாற்ற வேண்டும். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: புதிதாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள், இந்த இடத்தில் தடுப்புச் சுவர் இருப்பதால் தடுமாறி, அதில் அடிக்கடி மோதுகின்றனர். பல வாகனங்கள் சேதமடைந்து, பொருளாதார ரீதியாக ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுநர்களின் அச்சத்தைப் போக்க, இந்த பகுதியில் இடையூறாக உள்ள தடுப்புச் சுவரை அகற்றி, அணுகு சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி