பெண்ணிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
கிண்டி, ஐ.டி., பெண் ஊழியரிடம் செயின் பறித்த நபரை, பைக்கில் துரத்தி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஜனனி, 20. இவர், கிண்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் பணி முடித்து, விடுதி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் ஜனனியின் இரண்டு சவரன் செயினை பறித்து ஓடினார்.இதை பார்த்த, கிண்டி, 'ஒலிம்பியா டெக் பார்க்' ஐ.டி., நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஷபி, 25, என்பவர், தன் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று, அரை கிலோ மீட்டர் துாரத்தில் அந்த நபரை மடக்கி பிடித்தார். அவரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற நபரை, பகுதிமக்கள் சேர்ந்து நையப்புடைத்து, கிண்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த பெனிஹியா, 37, என தெரிந்தது. இவர், பரங்கிமலை, நசரேத்புரம் பகுதியில் தங்கி ஓட்டுநராக பணி புரிகிறார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.