உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் ஜன., 29ல் சென்னையில் துவக்கம்

 ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் ஜன., 29ல் சென்னையில் துவக்கம்

சென்னை: ஆசிய அளவிலான சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இதற்கான 'லோகோ' வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. யூனியன் சைக்கிளிஸ்ட் இன்டர்நேஷனல், இந்திய சைக்கிளிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் ஆகியவை இணைந்து, 2026ம் ஆண்டிற்கான 'டிராக் ஆசிய கோப்பை' எனப்படும், சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகின்றன. வண்டலுாரில் உள்ள தமிழக விளையாட்டு பல்கலை வளாகத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேஷியா உட்பட 15 ஆசிய நாடுகளை சேர்ந்த, 100 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த ஹரிணி, ஸ்ருதிகா, ஷாருக், மஹிந்தன் உட்பட 8 வீரர்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான, 'லோகோ' வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், எஸ்.டி.ஏ.டி., கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி., உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, தமிழக சைக்கிளிங் சங்க தலைவர் சுதாகர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி