செங்கல்பட்டு - வாலாஜாபாத் நெடுஞ்சாலை மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரை நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் முதல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வரை, மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை, போக்குவரத்திற்கேற்ப அகலம் இல்லாமல், குறுகியதாக உள்ளது. பாலங்களும் சிறிய அளவிலேயே உள்ளன. தற்போது இச்சாலையில் கனரக சரக்கு வாகனங்கள், டாரஸ் லாரிகள் ஆகியவை அதிகமாக செல்வதால், சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்தது. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்ததால், சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி தடத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையை, 448 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, 2022ம் ஆண்டு அரசு நிதி ஒதுக்கியது. அதன் பின், செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை, 22 கி.மீ., தொலைவிற்கு நான்கு வழிச்சாலை, வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை, 13 கி.மீ., இருவழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கி, தற்போது பணிகள் முடிந்துள்ளன. செங்கல்பட்டு, பழைய சீவரம், உள்ளாவூர், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில், பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில் புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு, திம்மாவரம் நீஞ்சல் மடுவு குறுக்கிடும் இடத்தில், பாலம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையில், 90 சிறு பாலங்கள் மற்றும் 40 இடங்களில் பேருந்து நிழற்குடை மற்றும் கழிப்பறை கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனவே, ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரை, சாலை பணிகள் முழுதும் முடிந்துள்ளன. புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.