மகன் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
கூடுவாஞ்சேரி: தங்கள் மகனின் பிறந்த நாள் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு வழங்கிய தம்பதிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் நன் றி தெரிவித்தனர். கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 190 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இதில், இரண்டாம் வகுப்பு பயிலும் 30 மாணவ - மாணவியருக்கு இருக்கை வசதி இல்லை. இதனால், தரையில் அமர்ந்து படித்து வந்தனர். இது குறித்து அறிந்த, தாம்பரத்தை சேர்ந்த தொழில் முனைவோர் அருண் - சரண்யா தம்பதி, தங்கள் மகன் அக் ஷய், 4, பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி, மேசை ஆகிய பொருட்களை, நேற்று அன்பளிப்பாக வழங்கினர். தவிர, மகனின் பிறந்த நாளை அதே பள்ளியில் கொண்டாடி, அனைத்து குழந்தைகளுக்கும் 'கேக், சாக்லெட்' வழங்கினர். தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோர் அருண் - சரண்யா தம்பதியை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.