மேலும் செய்திகள்
மண்ணோடு மண்ணான மக்களின் வரிப்பணம்
27-Nov-2025
வண்டலுார்: வண்டலுார் ஊராட்சியில், அப்பகுதி மக்கள் விருப்பத்திற்கு மாறாக குளம் வெட்டி, மக்களின் வரிப்பணம் 23 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பொழுதுபோக்க பூங்கா, நுாலகம் உள்ளிட்ட எவ்வித வசதியும் இல்லை. இங்கு, வாலாஜாபாத் சாலையோரம் உள்ள தாங்கல் ஏரியை துார்வாரி, அதன் கரையோரம் நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் விருப்பத்திற்கு மாறாக, தாங்கல் ஏரிக்கு எதிரே உள்ள பிள்ளையார் கோவில் அருகே, 2022ல் குளம் வெட்டப்பட்டது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலமாக, 23.55 லட்சம் ரூபாய் செலவில், 50 சென்ட் இடத்தில் இந்த குளம் வெட்டப்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கழிவுநீர் தேக்கம் வண்டலுார் மக்கள் கூறியதாவது: 23.55 லட்சம் ரூபாய் செலவில் வெட்டப்பட்ட இந்த குளம், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், இங்குள்ள பல வீடுகளின் கழிவுநீர் தேக்கமாக, குளம் மாறியுள்ளது. தற்போது ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து, கொசு உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இந்த குளம், எந்த பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டது எனத் தெரியவில்லை. அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து குளத்தை வெட்டினர். அதன் பின், எவ்வித பராமரிப்பும் செய்யாமல் விட்டுச் சென்றுள்ளனர். இதனால், மக்களின் வரிப்பணம் முற்றிலுமாக வீணடிக்கப்பட்டு உள்ளது. எனவே, குளத்தை துார்வாரி, சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து, கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
27-Nov-2025