துரியோதனன் படுகளம் செய்யூரில் விமரிசை
செய்யூர்:செய்யூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. செய்யூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, தினமும் மாலையில், மகாபாரதம் சொற்பொழிவு நடந்தது. அதன்பின், மகாபாரதம் தொடர்பான கட்டைக்கூத்து நாடகம் நடந்தது. நேற்று மதியம் 1:15 மணியளவில், வசந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் முன்பு, பிரமாண்டமாக களிமண்ணால் 35 அடி துரியோதனன் சிலை செய்யப்பட்டு, நாடக நடிகர்கள் பீமன் -- துரியோதனன் வேடமிட்டு, போர்க்கள காட்சியை தத்ரூபமாக நடித்தனர். அதன் பின், கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 7:00 மணியளவில் தீமிதி விழா நடந்தது. இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.